துபாய்: இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பின் இப்தார் நிகழ்ச்சியில் குறிப்பாக தமிழகத்தில் நோன்பு கஞ்சி முக்கிய இடம் பெறும். மிகுந்த சுவையுடைய இந்த கஞ்சியை பல்வேறு தரப்பினரும் விரும்பி பருகுவர். இந்த நோன்பு தற்போது தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழகத்தை சேர்ந்தோர் இதன் சுவையை வெளிநாடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளனர்.இவ்வருடம் ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் துபாயில் செயல்படும் தமிழ் அமைப்பான துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் வருடந்தோறும் ரமலான் நோன்பு காலம் முழுவதும் துபாய் தேரா பகுதியில் 6 ஆயிரம் பேருக்கு இப்தார் வழங்க ஏற்பாடு செய்கின்றனர்.
இங்கு வரும் அனைவருக்கும் தமிழக பாரம்பரிய சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென பிரத்யேகமாக தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சமையல் கலைஞர்கள் மூலம் இந்த நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.இதை தமிழர்கள் மட்டுமன்றி வட இந்தியர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர், வங்கதேசத்தினர், பாகிஸ்தானியர்கள், சீனர்கள் உள்ளிட்ட பலரும் இன, மத வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர். நோன்பு கஞ்சியை ருசித்த வெளிநாட்டவர்கள் கஞ்சி தயாரிப்பு குறித்த குறிப்புகளை பெற்று செல்வதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.