புதுடெல்லி: பெரு நகரங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கும் நிறுவனங்களின் அலுவலகச் செலவு அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த செலவுகளை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நிறுவனங்கள் ஆலோசித்து புது புது முடிவுகளை எடுத்து வருகின்றன. இது ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த வகையில்தான் பார்க்கிங் கட்டணத்தை இன்போசிஸ் பிடித்தம் செய்துள்ளது.
இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கார் மற்றும் டூவீலர்களில் அலுவலகத்துக்கு வருகிறோம். ஆனால், பார்க்கிங் கட்டணத்துக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ளனர். இந்த பணம் ஊழியர் நல நிதி அல்லது வேறு நிதியில் சேர்க்கப்படும் என நிர்வாகத்தில் கூறுகின்றனர் என தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து ஊழலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த விஜய் கோபாலிடம் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் தெலங்கானா தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அலுவலகம் இயங்க அரசு அனுமதி கொடுத்த பின்னர் நிறுவனத்திற்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், ஊழியர்களிடம் பார்க்கிங் கட்டணம் பிடித்தம் செய்துள்ள விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக சிறப்பு பொருளாதார மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று விஜய் கோபால் தெரிவித்தார்.