×

நாமக்கல்லில் நடைபெறும் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த  கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில், இருவரும் கோயிலுக்கு சென்றபோது கடந்த 2015 ஜூன் 23ம் தேதி மாயமானார்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்பட 17 பேர் மீது நாமக்கல் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தற்போது நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்கள் மிரட்டலால், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டதாக சித்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்றும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் முறையாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர் சித்ரா தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், நாமக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த  கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags : murder case trial ,Madurai , Namakkal, Investigation, Madurai, Madras High Court order
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...