பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் காலியாக இருக்கும் சாகயபுரம் மற்றும் காவிரிபுரம் ஆகிய 2 வார்டுகள், துமகூரு மாநகராட்சியில் காலியாகவுள்ள 1 வார்டு மற்றும் பதவி காலம் முடிந்துள்ள 63 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 29ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று முறைப்படி வெளியிடுகிறார்கள். மாநிலத்தில் தும்கூரு, மைசூரு, ஷிவமொக்கா ஆகிய மூன்று மாநகராட்சிகள், 29 நகரசபைகள், 23 டவுன் முனிசிபாலிட்டிகள் மற்றும் 53 பேரூராட்சிகளின் பதவி காலம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிந்தது. அந்த நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மீதியுள்ள 10 நகரசபைகள், 33 டவுன் முனிசிபாலிட்டிகள், 22 பேரூராட்சிகளின் பதவி காலம் கடந்த மார்ச் 8ம் தேதியுடன் முடிந்தது. பதவி காலம் முடிந்த நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டதால், தேர்தல் நடத்தாமல் பதவிகாலம் முடிந்த நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரிகளை நியமனம் செய்து நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.
மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பதவிகாலம் முடிந்துள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமில்லாமல் பல காரணங்களால் காலியாக உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மே 29ம் தேதி தேர்தல் நடத்துவதாகவும், அதற்கான வேட்புமனு தாக்கல் மே 9ம் தேதி தொடங்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையர் சீனிவாசாச்சாரி கடந்த 2ம் தேதி அறிவித்தார். அதன்படி ஹிரியூர் (சித்ரதுர்கா), ஹரிஹர் (தாவணகெரே), ஷிட்லகட்டா (சிக்கபள்ளாபுரா), சாகர் (ஷிவமொக்கா), நஞ்சன்கூடு (மைசூரு), திப்டூர் (துமகூரு), பசவகல்யாண் (பீதர்), ஷஹாபுரா (யாதகிரி) ஆகிய 7 நகரசபைகள். பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள ஆனேகல், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி மற்றும் நெலமங்கலா, கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காருபேட்டை, சீனிவாசபுரா, மாலூர். சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளி, ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா. துமகூரு மாவட்டத்தில் உள்ள பாவகடா, குனிக்கல். மைசூரு மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.நகர், பன்னூர். சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கடூர். தென்கனரா மாவட்டத்தில் உள்ள மூடபிதரி.
மண்டியா மாவட்டத்தில் உள்ள மளவள்ளி, கே.ஆர்.பேட்டை, ரங்கபட்டணா, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டல்பேட்டை, விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தாளிகோட்டை, பசவனபாகேவாடி, இண்டி, தார்வார் மாவட்டத்தில் உள்ள நவலகுந்தா, கதக் மாவட்டத்தில் உள்ள முண்டரகி, நரகுந்தா, ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பேடகி, ஷிங்காவி, வடகனரா மாவட்டத்தில் உள்ள பட்கல், பீதர் மாவட்டத்தில் உள்ள பால்கி, ஹும்னாபாத், சிடகுப்பே, பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹரப்பனஹள்ளி, சண்டூர், எச்.ஹடகலி ஆகிய 33 டவுன் முனிசிபாலிட்டிகள். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முளகல்மூரு மற்றும் ஹொளல்கெரே, ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஷிராளகொப்பா, சொரூப், ஹொசநகர். துமகூரு மாவட்டத்தில் உள்ள துருவகெரே, சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கொப்பா, சிருங்கேரி, மூடிகெரே, நரசிம்மராஜபுரா.
தென்கனரா மாவட்டத்தில் உள்ள முல்கி மற்றும் சூள்யா, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஆலூர் மற்றும் அரகலகூடு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள யளந்தூர் மற்றும் ஹனூர், தார்வார் மாவட்டத்தில் உள்ள கலகடகி மற்றும் அல்னாவரா, வடகனரா மாவட்டத்தில் உள்ள ஹொன்னாவரா மற்றும் சித்தாபுரா, பீதர் மாவட்டத்தில் உள்ள ஹவுரத் மற்றும் பல்லாரி மாவட்டத்தில் உள்ள கமலாபுரா ஆகிய 22 பேரூராட்சிகளுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய மே 16 இறுதி நாளாகும். மனு மீது 17ம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுவாபஸ் பெற 20ம் தேதி கடைசி நாளாகும்.