திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தர்கள் திருமலையில் இருந்து திருப்பதி நோக்கி செல்லக்கூடிய முதலாவது மலைப்பாதையில் நேற்றிரவு வாகனங்கள் செல்லும் இடமும், பக்தர்கள் நடந்துவரும் வழியுமான மொக்கால மெட்டு என்னுமிடத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சாலையோரத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது அமர்ந்து இருந்தது. இதனை அவ்வழியாக சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பதிக்கு சென்ற பக்தர்கள் பார்த்து அச்சமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் சைரன் அடித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தை வனப்பகுதிக்கு சென்ற பிறகும் பக்தர்களை தனியாக செல்ல வேண்டாம் எனவும் கூட்டமாகச் செல்லும் படி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.