தூத்துக்குடி : கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்தது தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் தனது பணியை சரியாக செய்து வருகிறது என்றார். தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி கூறியுள்ளார்.
இதன் மூலம் வரும் மே 23ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்றும் புதிய தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி