ஐபிஎல் டி20 தொடரில், கடந்த 4ம் தேதி பெங்களூருவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின்போது, சன்ரைசர்ஸ் இன்னிங்சில் ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரின் 5வது பந்தை நடுவர் நிகெல் லாங் (50 வயது) நோ பால் என அறிவித்தார். ஆனால், டிவி ரீப்ளேவில் உமேஷ் கிரீஸை தாண்டாதது தெளிவாகத் தெரிந்தது. ஆர்சிபி கேப்டன் கோஹ்லியும், உமேஷ் யாதவும் சேர்ந்து வாக்குவாதம் செய்தாலும், நடுவர் லாங் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.
இன்னிங்ஸ் முடிந்து இடைவேளையின்போது தனது அறைக்குத் திரும்பிய லாங், கதவை ஓங்கி உதைத்துள்ளார். இதனால் பெரிதாக விரிசல் ஏற்பட்டு கதவு சேதமடைந்தது. பின்னர் தனது தவறை ஒப்புக்கொண்ட லாங், இதற்காக 5,000 இழப்பீடாக கொடுத்துள்ளார். எனினும், இது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் புகார் செய்துள்ளது. ஐசிசியின் பிரதான நடுவர் குழுவில் (எலைட்) அங்கம் வகிக்கும் லாங், இதுவரை 56 டெஸ்ட், 123 ஒருநாள் மற்றும் 32 சர்வதேச டி20 போட்டிகளில் பணியாற்றி உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் பைனலிலும் அவர் நடுவராக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி