முசாஃபர்பூர்: பீகார் மாநிலம் முசாஃபர்பூர் ஒரு ஹோட்டலில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைசீட்டு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற 5ம் கட்ட தேர்தலில் பீகாரில் உள்ள முசாஃபர்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்றைக்கு முசாஃபர்பூரில் ஒரு ஹோட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி, 2 ஒப்புகைசீட்டு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீட்டபோது, அங்கு திரண்ட உள்ளூர் வாசிகள் மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றிருப்பதாக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இது குறித்து முசாஃபர்பூர் மாவட்ட ஆட்சியர் ஆலோக் ரன்ஜன் கோஷ் விசாரணை நடத்தினார்.
அதில், தேர்தல் அலுவலரான அவதேஷ்குமார் என்பவர் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹோட்டலில் வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகும் பட்சத்தில், அதற்கு மாற்றாக பயன்படுத்துவதற்கு வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் தான் அவை எனவும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். தேர்தல் அதிகாரியின் கார் ஓட்டுநர் சென்று வாக்களித்துவிட்டு வரும் வரை காத்திருப்பதற்காக மாற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அவர் ஹோட்டலில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக இவை ஒரு ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்ததற்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி