சித்தூர்: காணிப்பாக்கம் பை-பாஸ் சாலையில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் பை-பாஸ் சாலை 24 மணி நேரமும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். பெரும்பாலானவர்கள் பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
இதில் தமிழகம், கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், பஸ், வேன் மூலம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதுதவிர காணிப்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட்ட காய்கறிகளை விற்பனை செய்வதற்காகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு உள்ள நிலையில், காணிப்பாக்கம் பை-பாஸ் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி