ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை அணிக்கு துணை கேப்டனாக செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தாண்டிற்கான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்காக அணிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கேய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கிறிஸ் கெய்ல் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கிறிஸ் கேய்ல், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக எந்தவிதமான போட்டியிலும் விளையாடுவது தனக்கு கவுரவம் எனக் கூறியுள்ளார். ஒரு மூத்த வீரர் என்கிற அடிப்படையில், கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு உறுதுணையாக இருப்பது தனது பொறுப்பு என்றும், இந்த உலக்கோப்பை தனக்கு மிகவும் சிறப்பான ஒன்று எனவும் கேய்ல் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக தங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவர் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி