×

மயிலாப்பூர், மதுராந்தகம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 63 சவரன், ரூ.30,000 கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: மயிலாப்பூர் மற்றும் மதுராந்தகம் பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 63 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ராமுலு (55), விவசாயி. நெல் வியாபாரமும் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் காற்றுக்காக வீட்டின் மாடியில் படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து கீழே வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 47 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* மயிலாப்பூர் நொச்சிக்குப்பம்  துர்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் உதயகுமாரி (49). மெரினா கடற்கரையில் பஜ்ஜி கடை நடத்தி  வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு முதல் தளத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி  விட்டு கடைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள் மற்றும் ரூ.20  ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெரினா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : houses ,Mylapore ,robbery ,sovereigns , Mylapore, Maduranthagam area, robbery
× RELATED கொடைக்கானல்: மரம் விழுந்ததில் 2 வீடுகள் சேதம்