சோளிங்கர்: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் சில வருடங்களாக எந்த கோயில்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி மலைக்கோயில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லிசன் பெர்னாண்டஸ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கோயிலின் பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டார். பின்னர், கோயில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது மலைக்கோயிலில் ஜாமர் கருவி பொருத்துவது. பக்தர்களுக்கு தரமான பிரசாதம், குடிநீர் வழங்குவது மற்றும் பாதுகாப்பு வசதிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது, கோயில் உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி