×

பொள்ளாச்சியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்: போலீசார் விசாரணை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் அருகே நரிக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலன் (40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (30) இவர்களுக்கு நித்தின் (6), பிசாந்த் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவி, கடந்த 29ம் தேதி பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், 45வயது மதிக்கத்தக்க பெண்  ஒருவர், தனது கணவர் உடல் நிலை சரியில்லாமல் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறி தேவியிடம் நன்றாக பழகியுள்ளார். அந்த பெண், பிரசவ வார்டில் இரவில் தங்க ஆண்களுக்கு அனுமதி இல்லையென்பதால்,  நானே இரவில் தங்கி குழந்தையை கவனித்து கொள்கிறேன் என்று தேவியிடம் கூறியுள்ளார்.

 இதை நம்பி அவரும் அனுமதிக்கவே, கடந்த 6 நாட்களாக தேவியின் அருகே இருந்து குழந்தையை அந்த பெண் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 1.20 மணியளவில் தேவி டிஸ்சார்ஜ் ஆனார். அப்போது உடன் இருந்து குழந்தையை கவனித்து வந்த அந்த பெண், வெளியே வந்து குழந்தையை தருவதாக கூறி தூக்கி வைத்துள்ளார். பின்னர் மூன்று பேரும் ஒன்றாக மருத்துவமனையில் உள்ள முன்பதிவு மையம் அருகே நடந்து  வந்துள்ளனர். இதற்கிடையே, குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கு தேவியும், பாலனும் மருந்தகத்திற்கு சென்றனர். திரும்பி வந்தபோது, குழந்தையுடன் அந்த பெண் மாயமாகி இருந்தார். எல்லா இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.  அதன்பிறகே அந்த பெண் நாடகமாடி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் தம்பதி இருவரும் கதறி அழுதபடி கிழக்கு ஸ்டேஷன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

  மருத்துவமனையில் ஆங்காங்கே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண், குழந்தையின் உடலில் துணியால் போர்வைபோல் போர்த்தி மருத்துவமனையிலிருந்து வெளியேறி, ஒரு ஆட்டோவில் ஏறி   செல்வது பதிவாகியிருந்தது.
 இதைடுத்து போலீசார், அந்த ஆட்டோ யாருடையது, அது எங்கு சென்றது, அந்த  பெண், குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்தில்  விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து 6 நாட்களே ஆன  ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Pollachi , shocking, Pollachi, Child trafficking,t government hospital
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!