லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி நேற்று கூறியதாவது: மோடி எங்கள் கூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் இந்த கூட்டணி எதிர்க்காலத்திலும் தொடரும். உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளத்துடன் கூட்டணி வைத்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து வருகிறார். அவரது குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அவரது நோக்கம் இரு கட்சிகளுக்குள் சண்டையை மூட்டுவதுடன் எங்களது தொண்டர்களை தவறாக வழி நடத்துவது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் கூறியதாவது: பிரதமர் மோடி ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்ததும் தனது பேச்சை மாற்றிக் கொள்கிறார். அவர் வாக்காளர்களை திசை திருப்பி வருகிறார். புதிதாக அமைய உள்ள மத்திய அரசில் பிரதமரைமுடிவு செய்யும் முக்கிய பொறுப்பை எங்கள் கூட்டணியே தீர்மானிக்கும் என பாஜவுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி 180 டிகிரி பிரதமர். அவர் முன்பு தெரிவித்ததை இப்போது அப்படியே மாற்றி கூறுகிறார்.
விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவேன் என்றவர், அவர்களது வருமானத்தை பாதியாக குறைத்துள்ளார். 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக தெரிவித்தவர் மாறாக 2 கோடி பேரை வேலை இழக்க செய்துள்ளார்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி