×

அம்பேத்கர் பேரன் ஆனந்த்ராஜ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாரா? பத்திரிகை செய்திக்கு மறுப்பு

காங்கிரஸ் கட்சியில் தான் சேர்ந்ததாக வெளியாக செய்தியை அம்பேத்கர் பேரன் ஆனந்த்ராஜ் அம்பேத்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் பேரன்களில் ஒருவரான ஆனந்த்ராஜ் அம்பேத்கர் குடியரசு சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஆனந்த்ராஜ் நேற்று முன்தினம் டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததாகவும், குடியரசு சேனா கட்சியின் டெல்லி வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலகுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் இச்செய்தியை ஆனந்த் ராஜ் அம்பேத்கர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து ஆனந்த்ராஜ் அம்பேத்கர் நேற்று கூறியதாவது:

நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் நான் சேர்ந்ததாக வந்த செய்தி தவறானது. அம்பேத்கர் இயக்கங்களுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் எங்களது கட்சிக்கு செல்வாக்கு கிடையாது. அதோடு டெல்லியில் எங்கள் கட்சி போட்டியிடவும் இல்லை. கடந்த 8 நாட்களாக மும்பையில்தான் நான் இருக்கிறேன். டெல்லிக்கு செல்லவே இல்லை. அப்படியிருக்கும்போது நான் எப்படி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்க முடியும்?. டெல்லியில் குடியரசு சேனா கட்சியின் கிளையை ஏற்கனவே நான் கலைத்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anandraj ,Ambedkar ,Congress , Ambedkar, grandson, Anandraj, Congress Party, denial
× RELATED அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி...