நியூயார்க்: அமெரிக்காவில் போயிங் விமானம் ஒன்று தரையிறங்கும்போது திடீரென நிலைதடுமாறி, அருகில் இருந்த ஆற்றில் பாய்ந்தது. ஆனால், விமானம் ஆற்றில் ஆழம் குறைவான இடத்தில் பாய்ந்ததால், அது மூழ்கிவிடாமல், பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். அமெரிக்காவின் குவாண்டநாமோ வளைகுடா கடற்படை நிலையத்தில் இருந்து வர்த்தக போயிங் விமானம் ஒன்று 136 பேருடன், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த விமானம் இரவு 9.45 மணி அளவில் ஜாக்சன்வில்லே கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது திடீரென விமானம் நிலைதடுமாறி ஓடி, ஓடுபாதையை ஒட்டியிருந்த ஜோன்ஸ் ஆற்றில் பாய்ந்தது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக விமானம் ஆற்றில் ஆழம் குறைவான இடத்தில் நின்றது. இதனால் விமானம் தண்ணீரில் மூழ்கவில்லை. உடனடியாக விமான நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், அவசர கதவு வழியாக, விமானத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். விமானம் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றிருந்தால், பயணிகள் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி