சென்னை: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் டெல்லியில் உள்ளது. இந்த தீர்ப்பாயத்திற்கு சென்னை உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த தீர்ப்பாயம் நிறுவனங்கள் திவாலாக அறிவிப்பது, பங்கு முதலீடு, நிர்வாக குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விசாரிக்கும். நாடு முழுவதும இந்த தீர்ப்பாயங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த தீர்ப்பாயங்களுக்கு நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் நீதித்துறை உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் (நாளை ஓய்வு பெறவுள்ளார்) நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ் டாயல் கரே உள்ளிட்ட 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பெல் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் சொக்கலிங்கம் உள்ளிட்ட 18 பேர் தொழில்நுட்ப உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதி எம்.வேணுகோபால் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பல்வேறு தீர்ப்புகளை சமீப காலமாக வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான நீதிபதி வேணுகோபால் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது தொழிலாளர் நீதிமன்றம், தொழிற்சாலைகள் தீர்ப்பாயங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி