×

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யை வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: சேலம் அருகே பயங்கரம்

சேலம்: சேலம் அருகே கொலை வழக்கில் பிடிபட்ட பிரபல ரவுடி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சேலம் மாவட்டம் வலசையூர் அருகே காட்டூரைச் சேர்ந்தவர் கணேசன் (31). முறுக்கு வியாபாரி. இவரை கடந்த மாதம் 5ம் தேதி மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து, சாலையில் தூக்கி வீசிவிட்டுச் சென்றனர்.

கொலையாளிகளை பிடிக்க  காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சுக்கம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (30), சின்னனூரை சேர்ந்த முத்து (27) ஆகிய இருவர் போலீசில் சரணடைந்தனர். பழனிசாமி கொடுத்த வாக்குமூலத்தில்,‘‘கடந்த மாதம், நான் காட்டூர் பகுதிக்கு பைக்கில் வந்தபோது, கணேசன் வந்த பைக் மீது மோதினேன். அப்போது சேதமடைந்த பைக்கை சரிசெய்ய என்னிடம் இருந்த 1,500 ரூபாயை கணேசன் பறித்துக்கொண்டார்.

மேலும் ரூ.15 ஆயிரம் கேட்டு மிரட்டி வந்தார். இதை மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த ரவுடி கதிர்வேலிடம் தெரிவித்தேன். அவரிடமும் கணேசன் தகராறு செய்திருந்தார். இதனால் ,நான், முத்து, கதிர்வேல, காட்டூர் ஆனந்தன் சேர்ந்து திட்டமிட்டு கணேசனை அடித்துக் கொலை செய்தோம்,’’ எனத்தெரிவித்தார். இதையடுத்து கணேசன் கொலை வழக்கில் ரவுடிகளான காட்டூர் ஆனந்தன், கதிர்வேல், முருகன், கோபி, பிரபு ஆகிய 5 பேரை காரிப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரவுடி கதிர்வேலை (28), போலீசார் பிடித்தனர். அவனிடம் விடிய விடிய விசாரித்தனர். அப்போது, கணேசன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை குள்ளம்பட்டியில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளான். அதனால் நேற்று காலை, அங்கு ஒரு ஜீப்பில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், எஸ்ஐக்கள் மாரி, பெரியசாமி, ஏட்டு ராஜமாணிக்கம் ஆகியோர் கதிர்வேலை அழைத்துக் கொண்டு சென்றனர்.

அங்கு சென்றதும், மறைவிடத்தில் இருந்த கத்தியை கதிர்வேல் எடுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ., மாரியை  வெட்டிவிட்டு தப்பி ஓடினான். உடனே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் மார்பில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே கதிர்வேல் சுருண்டு விழுந்து இறந்தான். தகவலறிந்து சரக டிஐஜி செந்தில்குமார், எஸ்பி தீபா கனிக்கர், கூடுதல் எஸ்பி சுரேஷ்குமார்சென்று விசாரித்தனர்.

காயமடைந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், எஸ்.ஐ., மாரி ஆகியோருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலு மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தகவலறிந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கதிர்வேலுவின் தந்தை சேட்டு, தாய் ராணி, தம்பி பூபதி, தங்கை பிரியா மற்றும் உறவினர்கள் திரண்டனர்.

உறவினர் சரவணன் கூறுகையில், ‘‘கதிர்வேைல வேண்டுமென்றே போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஒருநாளைக்கு முன்பு பிடித்து வைத்து கொன்றுவிட்டார்கள். யாரிடமோ போலீசார் பணம் வாங்கிக்கொண்டு இப்படி செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்றார். இந்த என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணையும் தொடங்கியுள்ளது. சேலத்தில் என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் ஆபாச படம் எடுத்த விவகாரம் காரணமா?

சேலம்  பட்டர்பிளை பாலம் வழியாக கோரிமேட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உறவினருடன்  கடந்த மாதம் பைக்கில் வந்தார். அவரை வழிமறித்த 6 பேர் கும்பல், மறைவான  இடத்திற்கு இழுத்துச்சென்று ஆபாசமாக படம் பிடித்து பணத்தை  பறித்துள்ளனர். இதுபற்றி அந்த பெண், கொண்டலாம்பட்டி போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பிரபல ரவுடிகளான  வெங்கடேஷ், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரை தேடி வந்தனர்.

அப்போது அந்த  ரவுடிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சேலம் வலசையூர் காட்டூரை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசனை (31) பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பெண்களை மிரட்டி ஆபாசமாக  படம் பிடித்து பணம் பறித்த நபர்கள் குறித்து அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில்தான் கணேசனை ரவுடிகள் தீர்த்துக் கட்டியதாக  கூறப்படுகிறது. ஆனால் காரிப்பட்டி போலீசார், கணேசன் கொலைக்கு பைக் மோதல்  தகராறு, கோயில் விழா தகராறில் முன்விரோதம் என தெரிவிக்கின்றனர்.

பொள்ளாச்சி  பாலியல் விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  சேலத்தில் பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த விவகாரம் வெளியானால் பெரும்  சர்ச்சை வெடிக்கும். எனவே விஷயம் பெரிதாகாமல் இருக்க இப்படி மறைத்து  விட்டனர் என்றும் அதன் காரணமாகவே ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் முக்கிய நபரான கதிர்வேலை என்கவுன்டர் மூலம் முடித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspector ,Terror ,SI ,Salem ,Rowdy , Inspector, si, cut, fled, popular rowdy, encounter, shot dead
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது