புதுடெல்லி: தன் மீதான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தன் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்தார்.
கடந்த மார்ச் 25ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராபர்ட் வதேராவின் மனுவுக்கு 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி அமலாக்கப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோக்லி, வினோத் கோயல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் நிலைக்குழு வழக்கறிஞர் அமித் மகாஜன், “பதில் மனு கிட்டத்தட்ட தயாராகி விட்டது. எனினும், அதை சமர்பிக்க கூடுதல் அவகாசம் தேவை,” என்று கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி