சோழவந்தான்: ஜீப் மீது சுற்றுலா பஸ் மோதிய மோதிய விபத்தில், ஜெயின் மத பெண் துறவிகள் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மேலும் 3 துறவிகள் உள்ளிட்ட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஜெயின் மதத் துறவிகள் சாத்வி (45), பிரியதர்ஷிகா (52), மஞ்சுளா (68), மிருதுரஞ்சனா (56), சமயதேமிஷா (35). இந்த பெண் துறவிகள் 5 பேரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் பாதயாத்திரையாக நேற்று அதிகாலை 3 மணியளவில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களுடன் ஒரு சைக்கிள் ரிக்ஷாவும், துறவிகளின் உடமைகளை ஏற்றிய ஒரு ஜீப்பும் வந்தது.
இந்த ஜீப்பை, டிரைவர் சக்கரவர்த்தி (37) ஓட்டி வந்தார். சோழவந்தான் அருகே நகரி நான்கு வழிச்சாலையில், சத்தியமங்கலத்திலிருந்து கன்னியாகுமரி சென்ற சுற்றுலா பஸ், திடீரென ஜீப் மீது பயங்கரமாக மோதியது. அந்த ஜீப் பெண் துறவிகள் மீது மோதி, சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் துறவிகள் சாத்வி, பிரியதர்ஷிகா இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். டிரைவர் மற்றும் 3 பெண் துறவிகளும் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிந்து பஸ் டிரைவர் செல்வக்குமாரை (37) கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி