×

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சியாளர்கள் பற்றாக்குறை விரக்தியில் மாணவர்கள்

நாகர்கோவில்:  நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாததால் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர்.  நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி, கூடைப்பந்து, இறகு பந்து, கையுந்து பந்து, தடகள போட்டிக்காக தினசரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இது தவிர காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயிற்சிக்காகவும் அதிமானோர் வந்து செல்கின்றனர். ஆண்களுக்கான ஜிம் வசதியும் உள்ளது. இதுதவிர வெளிமாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு துறையில் ஆர்வமிக்க மாணவிகள் தங்கி பயில்வதற்கான விடுதியும் உள்ளது. இதேபோல் உள்அரங்க விளையாட்டு கூடங்களும் உள்ளன. இதன் வருவாய்க்காக  பல கோடி மதிப்புள்ள கடைகளும் விளையாட்டரங்கத்தின் வெளிப்பகுதியில் உள்ளன. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், விளையாட்டரங்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.

  கழிவறை வசதிகள், சுத்தி கரிக்கப்பட்ட குடி தண்ணீர் வசதி ஆகியவை மருந்துக்கூட இல்லை. அடிப்படை வசதிகள்தான் இல்லை என்றால், இங்கு பயிற்சி பெற போதுமான விளையாட்டு உபகரணங்கள், போதுமான  பயிற்சியாளர்களும் இல்லை. நீச்சல், தடகளம், கால்பந்து, பளுதூக்குதல் ஆகிய 4 பிரிவுகளுக்கு மட்டுமே பயிற்சியாளர்கள் உள்ளனர். இதர விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லை. அவர்களுக்கு தகுதி வாய்ந்த கோச்சுகளுக்கு பதில்,  முன்னாள் விளையாட்டு வீரர்களே பயிற்சி அளிப்பதாக கூறப்படுகிறது. உள் அரங்க விளையாட்டான ஸ்குவாஷ்க்கு தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சியாளர்கள் இல்லை. இதனால் அந்த அரங்கம் பூட்டப்பட்டு கிடக்கிறது.  இதேபோல் யோகா, டேபிள் டென்னிஸ், ஜிம்மிலும் பயிற்சியாளர்கள் இல்லை. இதனால் அவைகளும் பூட்டியே கிடக்கின்றன. இது தொடர்பாக அண்ணா விளையாட்டரங்க நலச்சங்க செயலாளர் ஜெயின்ஷாஜி  கூறியதாவது: தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றவர்களுக்கு கூட நாகர்கோவில் அண்ணா விளையாட்டு  அரங்கில் முறையான பயிற்சி அளிப்பது இல்லை.

தனியாக பணம் தருபவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கின்றனர். விளையாட்டரங்க விடுதி மாணவர்களுக்கான உபகரணங்களை பணம் தரும் மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அஞ்சுகிராமம் ஜேம்ஸ்டவுன் லெட்சுமிபுரத்தை சேர்ந்த கிரேசியா மெர்லின் மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று முதல்வர் கோப்பைக்கான போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார்.  ஜப்பான் சர்வதேச இளநிலை பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் நடந்த போட்டியிலும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். இந்த பெண்ணிற்கு அண்ணா விளையாட்டரங்கில்  பயிற்சி அளிக்கப்படவில்லை. சர்வதேச தடகள போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தை சேர்ந்த 3 பேர் ஹாங்காங் செல்கின்றனர்.

இதில் ஒரு மாணவி மட்டும் தங்கும் விடுதியை சேர்ந்தவர்.  2 பேர் வெளியில் பயிற்சி பெற்றவர்கள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்டம் தோறும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக தரமான உணவு, கல்வி வசதி, உபகரணங்கள் தந்தும், பயிற்சியாளர்களின் ஆர்வமின்மை காரணமாக ஒரு மாணவி மட்டுமே சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எனவே விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், முறையாக பயிற்சி அளிக்காத பயிற்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

குறைந்த தொகைக்கு ஏலம்
விளையாட்டரங்கில் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட கடைகள்  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் அனைத்தும் குறைந்தபட்ச தொகைக்கு ஏலம் சென்று உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விளையாட்டரங்க அலுவலகத்தின் கீழ்பகுதியில் உள்ள கடைகள் மாதம் ரூ.60ல் இருந்து ரூ.100 வரையே வாடகை தருவதாக கூறப்படுகிறது. விளையாட்டரங்கம் திறக்கப்பட்ட போது, அப்போதைய கலெக்டரின் பரிந்துரையில், எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் முக்கிய பிரமுகர்களுக்கு கடைகளை வழங்கியதால், தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் சிலர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோடி கணக்கில் வருவாய் ஈட்டியுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி போன்று இங்கும், அதிரடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trainers ,Nagercoil Anna Stadium , Nagercoil, Anna Stadium, Trainers
× RELATED உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க...