×

நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டில்களில் தான் நீரை பார்க்க நேரிடும்: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் பரப்பளவை 6 மாதங்களில் அளவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டில்களில் தான் நீரை பார்க்க நேரிடும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இலவசங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதில் வீணாகும் நீரை சேமிக்க அரசு அணைகளை கட்டலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது மழை நீர் கடலில் வீணாக கலந்தது. இதனால் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நவீன நீர்மேலாண்மை தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட கோரி வி.பி.ஆர்.மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏரி மற்றும் குளங்களின் நீர்பிடிப்பு பகுதிகளை விரிவு படுத்துவதன் மூலம் மழை நீர் வீணாவதை தடுக்க முடியும் எனவும், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் வெள்ள சேதங்களுக்கு காரணமாக அமைவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பொதுபணித்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், சென்னை அடையாறு, கூவம், பாக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10,347 ஆக்கிரமிப்புகளில், 4161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக பதில் மனு தாக்கல் செய்தார். மேலும் அடையாறு நதி 6.18 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படுவதாகவும், அடையாறு நதிக்கரைகள் 50 லட்சம் ரூபாய் செலவில் பலப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, நீர்நிலை பராமரிப்புக்காக ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஏரிகள் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முழுவீச்சில் செயல்படுவதாகவும், தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை பாதுகாக்க ரூ.100 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுக்காக்க தலைமை செயலாளர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவுநீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்யவேண்டும் எனவும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த பணிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். கடமையை தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டிலில் தான் நீரை பார்க்க நேரிடும் என கவலை தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : descendants ,judges , Water, security, Madras High Court
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...