சென்னை: ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடைப்பெற்று வரும் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவுக்கான முதல் தங்கத்தை திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து (30 வயது) வென்று சாதனை படைத்தார்.மகளிர் 800மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றில் முதல் இடம் பிடித்த அவர், பைனலில் அபாரமாக செயல்பட்டு (2 நிமிடம், 2.70 விநாடி) தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதேபோல ஆண்கள் 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கும் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம், வெள்ளி வென்ற வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். மேலும் கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகிய இருவரும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்பதையும் முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பிலும், சினிமா பிரபலங்கள் சார்பிலும் கோமதி மாரிமுத்துவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி