×

சொத்து பிரித்த தகராறில் விபரீதம் அண்ணனுக்கு சரமாரி கத்திக்குத்து: தம்பிக்கு வலை

சென்னை: சொத்து பிரித்ததில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் சரமாரியாக குத்திய தம்பியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சென்னை மயிலாப்பூர், லாலா தோட்டத்தை சேர்ந்தவர் பழனி (38). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப சொத்தை பிரித்துள்ளனர். அதில் பழனி தனது தம்பி செந்திலுக்கு பணம் தர வேண்டும் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு பழனி பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது தனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்கும் படி செந்தில் தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.  

அப்போது செந்தில் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணன் பழனியை இடது பக்க மார்பு, வயிறு என உடல் முழுவதும் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பழனி உயிருக்கு போராடினார். இவரது அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த செந்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பழனியை மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான செந்திலை தேடி வருகின்றனர். சொத்துக்காக அண்ணனை தம்பியே கொலை செய்ய முயன்ற சம்பவம் மயிலாப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : brother , Disaster, property disputes, Brother knocks,screams, brother
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...