வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 சீக்கியர்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ளது வெஸ்ட் செஸ்டர் நகர். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சீக்கியர்கள் குடும்பம் வசித்து வந்தது. இந்த வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில், 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். அப்போது, அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் வெளியே சென்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பினர். இவர்கள் எதற்காக கொல்லப்பட்டனர், யார் கொன்றது, என்ன காரணம் என்பது தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்த பிறகு படுகாயம் அடைந்த ஒருவர், அவசர போலீசை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது அவர் பேசிய ஆடியோ ஆதாரத்தை போலீசார் நேற்று வெளியிட்டனர். அதில் அவர், ‘என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் கிடக்கின்றனர். எங்களை காப்பாற்ற யாரும் இங்கு இல்லை. தயவு செய்து வாருங்கள்’ என கூறியுள்ளார்.
போலீசார் அந்த வீட்டுக்கு சென்று பார்த்த போது, துப்பாக்கிச்சூடு நடந்தபோது அந்த வீட்டில் உள்ள பெண்கள் சமையல் செய்து கொண்டு இருந்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டன. இதனால், வீட்டுக்குள் திடீரென நுழைந்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகி வருகிறது. இருப்பினும், இது இனப் படுகொலை சம்பவமாக தெரியவில்லை என அமெரிக்க போலீசார் தெரிவித்தனர்.
பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு2 பேர் பலி; 4 பேர் படுகாயம்
அமெரிக்காவில் சார்லட் பகுதியில் செயல்படும் வடக்கு கரோலினா பல்கலை.யில் கடந்த செவ்வாயன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த அன்டோனியோ கூறுகையில், ``இரண்டு முறை பயங்கர சத்தம் கேட்டது. அனைவரும் பதற்றத்துடனும், பயத்துடனும் அங்கிருந்து வெளியேறி ஓடி வந்தனர், என்றார். இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய ட்ரைஸ்டன் ஆன்ட்ரூ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி