×

சிபிஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைதாகிறார்கள்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாசபடம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24), மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த பாலியல் வழக்கை ஏற்கனவே தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால், கடந்த 27ம் தேதியே சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியது.

சிபிஐ ஐஜி விப்லஸ் குமார் சவுத்ரி, ஏ.எஸ்.பி. கலைமணி, இன்ஸ்பெக்டர் விஜயா வைஷ்ணவி உள்ளிட்ட சிபிஐ போலீசாரிடம் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தார்.  சிபிஐ அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் பொள்ளாச்சி சென்று குற்றவாளிகள் வீடு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரிடம் விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள், சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபனிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர், கைது செய்யப்பட்ட 5 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட சில பெண்களிடம் கிடைத்த தகவல் அடிப்படையிலும் ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அதில் மேலும் 3 பேருக்கு பாலியல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர், வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் அவர்கள் 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 2 பெண்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.  ஏற்கனவே அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi , CBI officers, intense action, Pollachi, sex
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!