மும்பை: மகாராஷ்டிராவில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை என்பதால், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தக் கோரி அம்மாநில முதல்வர் பட்நாவிஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின்மையால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா வங்கியில் கடன் உதவி கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், வங்கி நிர்வாகத்தினர் மக்களுக்கு கடன் வழங்க கூடாது என்று முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதில், வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாயக் கடனாக ரூ.1,300 கோடிக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த பகுதிகளில் வாராக்கடன் அதிகம் ஏற்கனவே இந்த பகுதிகளில் வாராக்கடன் 18.36 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளன. அதனால், இந்த பகுதிகளுக்கு விவசாயக் கடன் வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
வறட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வங்கிகள் கடன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் மாநில அரசு விவசாயிகளுக்கு நிதிவுதவி திட்டங்களை அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 11ம் தேதி 7 தொகுதிகளுக்கும், 18ம் தேதி 10 தொகுதிகளுக்கும், 23ம் தேதி 14 தொகுதிகளுக்கும், 4வது மற்றும் இறுதிக்கட்டமாக 17 தொகுதிகளுக்கு கடந்த 29ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதனால், அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அம்மாநில முதல்வர் ேதவேந்திர பட்நாவிஸ் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 151 தாலுகாவில் கடுமையான வறட்சி நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் வினியோகம் கூட செய்ய முடியவில்லை. மத்திய அரசின் சார்பில் வறட்சி நிவாரண நிதியாக ரூ.4,714 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், அவற்றை தேர்தல் நடத்தை விதிகளால் ெசலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டர்கள் விடமுடியவில்லை. விவசாயிகளுக்கு கடன் வசதிகள், மருத்துவமனை பணிகள், அடிப்படை கட்டமைப்பு பணிகள், சாலைப்பணிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை தேவை பணிகளும் முடங்கியுள்ளது. தேர்தல் பணிகளால், சில அரசு அதிகாரிகள் மக்களிடம் குறைகேட்பு கூட்டங்களை கூட நடத்த முடியவில்லை. மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி