மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்தது. தனி பெரும்பான்மை பெறுவதற்கு 2 இடங்கள் தேவைப்பட்டன. அப்போது, பகுஜன் சமாஜின் 2 எம்எல்ஏ.க்கள், சமாஜ்வாடியின் ஒரு எம்எல்ஏ, 4 சுயேச்சைகள் ஆதரவுடன் கமல்நாத் ஆட்சியமைத்தார். இந்நிலையில், குணா மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் லோகேந்திர சிங் ராஜ்புத் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். மேலும், இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்பியுமான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு தனது ஆதரவை தருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, கமல்நாத் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `பாஜ போன்றே காங்கிரசும் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது. குணா தொகுதி வேட்பாளரை போட்டியில் இருந்து விலக காங்கிரஸ் வலியுறுத்தியது. எனவே. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி