டெல்லி : விதிகளை மீறி பிரதமர் மோடி, அமித்ஷா பரப்புரை செய்ததாக தொடரப்ப்ட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்., 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் போன்ற பாதுகாப்பு படையினரின் சாதனைகளை பிராச்சாரத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இது தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் பலமுறை புகார் செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து மோடி, அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 4 வாரங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை என மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி குற்றம் சாட்டினார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்து மே 6ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி