மதுரை: தேனி ஆயுதப்படை காவலர் கணேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தேன். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் என்னை வீட்டு வேலைக்காரர் போல் நடத்தினார். இதுதொடர்பாக தேனி எஸ்பியிடம் புகார் அளித்தேன். அவரும் எனக்கு பல்வேறு தொல்லைகள் அளித்தார். இந்த சூழலில் என்னை ராமநாதபுரத்துக்கு இடமாறுதல் செய்து, 2018ல் தேனி எஸ்பி உத்தரவிட்டார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளித்தேன். டிஜிபியும் நடவடிக்கை எடுக்கவில்லை.என்னைப் போலவே ஆயுதப்படை காவலர் ரகுவுக்கும், அவர்கள் பல்வேறு தொல்லைகள் அளித்தனர். இதனால் இருவரும் டிஜிபி அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றோம். இதனால் எங்களை சஸ்பெண்ட் செய்து தேனி எஸ்பி 22.3.2018ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக தேனி எஸ்பி, எனக்கு 8.4.2018ல் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார். என்னிடம் விசாரணை நடத்தாமல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்படி என்னை பணிநீக்கம் செய்து 15.10.2018ல் எஸ்பி உத்தரவிட்டார். எனவே என்னை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என்னை மீண்டும் பணியில் சேர்த்து பணித்தொடர்ச்சி, பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி மகாதேவன் நேற்று விசாரித்து, இதுதொடர்பாக டிஜிபி, திண்டுக்கல் டிஐஜி, தேனி எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி