சென்னை : சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 44 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியில் அதிநவீன வசதிகள் கொண்ட புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கனவே 350 கோடி ரூபாயாக திட்டம் வகுக்கப்பட்டு, பின்னர் 417 கோடி ரூபாயாக திட்டம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் புதிய நிலையத்திற்கு எதிராக நடராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளார். மனுவில் கடந்த 1970ம் ஆண்டு கஸ்தூரி என்பரிடம் இருந்து நில உச்ச வரம்பின் கீழ் இந்த நிலம் கைப்பற்றப்பட்டது.
நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வழங்க கைப்பற்றப்பட்ட இந்த நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து நில உச்ச வரம்பின் கீழ் கைப்பற்றப்பட்ட நிலத்தை பொது பயன்பாட்டிற்கு வழங்கக்கூடாது என்பதால் பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் கேட்டதையடுத்து வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
