துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்து தந்தை - முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் வசிப்பவர் கிரண் பாபு. இந்தியரான இவர் 2016ம் ஆண்டு சனம் சபூ சித்திக் என்ற பெண்ணை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார். எமிரேட்சில் உள்ள மருத்துவமனையில் இவர்களுக்கு 2018 ஜூலையில் அனாம்தா அக்லைன் கிரண் என்ற பெண் குழந்தை பிறந்தது. அரபு நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு உள்ள சட்டப்படி, முஸ்லிம் ஆண், வேறு மத பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், முஸ்லிம் பெண் வேறு மத ஆணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இதை காரணம் காட்டி அனாம்தா அக்லைன் கிரணுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.
ஆனால், நீதிமன்றம் மூலம் தடையில்லா சான்று பெற்ற பிறகு, முதல் முறையாக இந்து ஆண் - முஸ்லிம் பெண் தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ஐக்கிய அரபு எமிரேட்சில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரண் பாபு கூறியதாவது: சட்ட விதிகளை காரணம் காட்டி என் மகளுக்கு பிறப்பு சான்று தர மறுத்து விட்டனர். இதனால் எந்த ஒரு சட்ட ரீதியான சான்றும் என் மகளுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தை நாடினேன். இந்திய தூதரக அதிகாரி .ராஜமுருகன் எனக்கு உதவிபுரிந்தார். நீண்ட சட்ட போராட்டத்துக்கு பிறகு, விதிவிலக்காக கருதி எனது மகள் அனாம்தா அக்லைன் கிரணுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க அனுமதி கிடைத்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி