சென்னை: அமெரிக்கா போன்று தமிழகத்தில் மக்காச்சோளம் விளைச்சலை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அமெரிக்கா பல்கலை பேராசிரியர்கள் விரைவில் தமிழகத்திற்கு வந்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர் என்று நீர்வள,நிலவள திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பாசன உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நீர்வள,நிலவள திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, மீன்வளத்துறை உட்பட 7 அரசு துறைகள் மூலம் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இரண்டாவது கட்டமாக ரூ.3,500 கோடி செலவில் 4778 ஏரிகள், 477 அணைகட்டுகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், வேளாண்மை மாற்று பயிர் செய்தல், மேம்படுத்தப்பட்ட மீன்வளர்ப்பு, நெல் சாகுபடி செய்தல், நுன்பாசனம் (காய்கறி/நிலக்கடலை), சொட்டு நீர் பாசனம் (தென்னை/கரும்பு/பழ வகைகள்) உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பல்வேறு துறை பேராசியர்கள் மற்றும் கன்சல்டன்ட் துணையுடன் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், இதில், எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து தற்போது நீர்வளநிலவள திட்டத்தில் நவீன யுக்தியை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீர்வள நில வளத்திட்டத்தை அமெரிக்காவில் உள்ள காரனல் பல்கலைகழகத்துடன் இணைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நீர்வள நிலவள திட்ட இயக்குனர் அலுவலகம் அந்த பல்கலை கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதைதொடர்ந்து காரனல் பல்கலை கழகம் சார்பில் நவீன யுக்தியை பயன்படுத்தி தமிழகத்தில் மக்காச்சோளம் விளைச்சலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 1 எக்டேர் 10 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் மக்காச்சோளம் 1 எக்டோில் 25 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை போன்று தமிழகத்திலும் மக்காச்சோளம் விளைச்சலை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா காரனல் பல்கலை வேளாண்துறை பேராசியர்கள் உதவியுடன் இங்கு விளைச்சலை அதிகப்படுத்துவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், என்ன மாதிரியான உரம் போடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நீர்வளநிலவள இரண்டாவது கட்டம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்ட பிறகு, இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நீர்வளநிலவள திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி