×

பொள்ளாச்சி விவகாரம் வழக்கை வாபஸ் வாங்கு... பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ்: சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பாலியல் வழக்கு தொடர்பாக புகார் கொடுத்த பெண்ணை, பார் நாகராஜ் மிரட்டும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொள்ளாச்சியில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மேலும் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கியதாக அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி., போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜ், ஒரு பெண்ணிடம் செல்போனில் வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுக்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த ஆடியோ விவரம்:
நாகராஜ்: என்னை பார் நாகராஜ் என்றால் எல்லோருக்கும் தெரியும். என் பெயரை சொல்லிதான் உன்னிடம் பேச வேண்டுமா? பொள்ளாச்சி சம்பத் பெயரிலும், கோகிலா பெயரிலும் கொடுத்த வழக்கை உடனடியாக வாபஸ் வாங்கிவிட்டு, நீ எடுத்த வீடியோவை ‘டெலிட்’ செய்து விடு
பெண்: நான் ஒன்றும் வீடியோ எடுக்கவில்லை. வழக்கை வாபஸ் வாங்க முடியாது.
நாகராஜ்: உன் கணவரை எங்கு வந்தாலும் நான் தூக்குவேன். உங்கள் குடும்பத்தையும் தூக்குகிறேன். எங்கு சென்றாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு ஓடி விடு, இல்லையென்றால் உன்னையும் என்ன செய்வேன் என்று தெரியாது.
பெண்: வழக்கை வாபஸ் வாங்க மாட்டோம், நீ என்ன செய்வே, அதையும் பார்த்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதேபோல வெளியாகியுள்ள 2 ஆடியோக்களில் வெவ்வேறு குரலில் அந்த பெண்ணிடம் பேசும் பார் நாகராஜ், உயிர் வேண்டும் என்றால் வழக்கை வாபஸ் வாங்கு என்று மிரட்டுகிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. பார் நாகராஜ் மிரட்டும் பெண் யார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த பெண் ஆபாச வீடிேயாவில் சிக்கி மிரட்டப்பட்ட பெண்ணாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


சிபிஐ அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாசபடம் எடுத்து சீரழித்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24), மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. ஆனால், சிபிசிஐடி போலீசார் நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிைலயில் நேற்று முன்தினம் இரவு முதல் சிபிஐ விசாரணை துவங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
 
இதையடுத்து சிபிஐ ஐஜி விப்லஸ் குமார் சவுத்ரி, ஏ.எஸ்.பி.கலைமணி உள்ளிட்ட சிபிஐ போலீசார் நேற்று மாலை டெல்லியில் இருந்து கோவை வந்தனர். அவர்களிடம் சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன், பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆவணங்களை ரேஸ்கோர்சில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து ஒப்படைத்தார். வழக்கு ஆவணங்களை பெற்று கொண்ட சிபிஐ அதிகாரிகள் வழக்கு பற்றிய விவரங்களை எஸ்பி நிஷா பார்த்திபனிடம் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சி சென்று விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,Nagaraj , Pollachi, affair, case, withdraw, intimidate, look nagaraj
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!