மதுரை : உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் நாகராஜன் பொறுப்பேற்றுள்ளார். மதுரை வாக்குப் பதிவு மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த சம்பவம் அறிந்த திமுக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, மதுரை தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான நடராஜன் மாற்றப்பட்டார். இந்நிலையில் புதிய தேர்தல் அதிகாரியாக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்ட நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை தேர்தல் பார்வையாளர்கள் வரவுள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாகவும், சுமூகமாகவும் நடத்த அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பார்வையாளர்ளுடன் ஆலோசித்து தேவைப்பட்டால் கூடுதல் குழுக்கள் அமைக்கப்படும். மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த பின்னர், தேவைப்படும்பட்சத்தில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி