×

மகனை எம்பி.யாக்க தெருத் தெருவாக சுற்றும் முதல்வர்

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மக்களவை தொகுதியில் நாளை தேர்தல் நடக்கிறது. இங்கு தற்போதைய எம்பி.யாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளார். இவர் இந்த தேர்தலில் பாஜ சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளராக முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் (38) போட்டியிடுகிறார். இதே தொகுதியில் 1980ம் ஆண்டிலிருந்து 5 முறை எம்பி.யாக இருந்தவர் அசோக் கெலாட்.

இந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கும் மகனை வெற்றி பெற வைக்க ஜோத்பூரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் அசோக் கெலாட். இங்கு கஜேந்திர சிங் ஷெகாவத்துக்காக பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ‘மகன் வெற்றிக்காக முதல்வர் கெலாட் ஜோத்பூர் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார்’ என கிண்டல் செய்தார்.

இதற்கு பதிலளித்த கெலாட், ‘‘மகனுக்காக எல்லா தந்தையும், இதுபோல்தான் செய்வார்கள். எந்த தந்தை இப்படி செய்யாமல் இருக்கிறார்? இதை மோடியால் புரிந்து கொள்ள முடியாது. வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தை மோடி திசை திருப்புகிறார்,’’ என்றார்.

ஷெகாவத் கூறுகையில், ‘‘ஜோத்பூர் தெருக்களில் இரவு பகலாக முதல்வர் பிரசாரம் செய்கிறார். இத்தொகுதியின் வெற்றிக்காக மற்ற 24 தொகுதிகளையும் சமரசம் செய்ய கெலாட் தயாராக இருக்கிறார். இது, அவரது பீதியடைந்த மனநிலையை காட்டுகிறது. இத்த தேர்தல் முதல்வர் மகனுக்கும், சாதாரண மனிதரின் மகனுக்கும் இடையே நடக்கும் போட்டி,’ என்றார்.

ஆனால், இத்தொகுதி மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். ‘தொகுதி வேகமாக வளர்ச்சி பெற வேண்டுமானால் முதல்வரின் மகனுக்குதான் ஓட்டு போட வேண்டும். அதே நேரம், மோடியும் எங்களுக்கு வேண்டும். அதனால், யாருக்கும் ஓட்டுப் போடுவது என்பது குழப்பமாகவே உள்ளது,’’ என்கிறார் ஒரு வியாபாரி.

மற்றொருவர் கூறுகையில், ‘‘இது, முதல்வரின் கவுரவ பிரச்னை. முதல்வர் மகன் தோல்வியுற்றால், அது முதல்வருக்குத்தான் பின்னடைவு. எனவே, இது நடக்க மக்கள் விட மாட்டார்கள் என நினைக்கிறேன்,’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Street Street , Son, mp, street, circulate, chief minister
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...