×

பாலியல் பலாத்கார வழக்கில் அஸ்ராம் பாபுவின் மகன் குற்றவாளி: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: பாலியல் வழக்கில் சாமியார் அஸ்ராம் பாபுவின் மகன் நாராயண் சாய் குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர், சாமியார் அஸ்ராம் பாபு, அவரது மகன் நாராயண் சாய் மீது பாலியல் புகார் அளித்தனர். அதில், கடந்த 1997ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சாமியார் அஸ்ராம் பாபு, ஆசிரமத்தில் தங்கியிருந்த போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூத்த சகோதரி குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆசிரமத்தில் தங்கியிருந்த போது கடந்த 2002 முதல் 2005 வரை அஸ்ராம் பாபுவின் மகன் நாராயண் சாய் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைய சகோதரி தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 2013ம் ஆண்டு இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு அஸ்ராம் பாபுவை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாராயண் சாய் வழக்கை விசாரித்த சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், பாலியல் வழக்கில் அவர் குற்றவாளி என்று நேற்று அறிவித்தது. இதற்கான தண்டனை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asaram Babu ,Gujarat , Sexual Harassment case, Asram Babu, son of the culprit, Gujarat court
× RELATED குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்