×

பல ஆண்டாக பராமரிக்காததால் விபரீதம்; காவல் நிலைய கட்டிடம் இடிந்து பெண் துப்புரவு ஊழியர் படுகாயம்

அம்பத்தூர்: அம்பத்தூர் காவல் நிலைய வளாகத்தில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு ஆகியவை அமைந்துள்ளன. இதில் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ, 15 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த காவல் நிலைய கட்டிடம், இரண்டு அறைகள் கொண்ட மிகவும் சிறிய கட்டிடம் ஆகும். ஒரு அறையில் இன்ஸ்பெக்டரும், மற்றொரு அறையில் சக பெண் காவலர்களும் பணியாற்றி வருகின்றனர். சுமார் 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின்  மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சு அடிக்கடி உடைந்து விழுந்துள்ளது.

அப்போதெல்லாம், பணியில் இருக்கும் பெண் காவலர்கள் காயமடைவதும் உண்டு. மேலும், ஜன்னல்கள், ஸ்விட்ச் பாக்ஸ், கதவுகள் உடைந்து கிடக்கின்றன. எனவே, எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என போலீசார் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை பெரும்பாலான  போலீசார் ஐபிஎல்  கிரிக்கெட் விளையாட்டு பாதுகாப்புக்கு சென்றுவிட்டனர்.

பெண் போலீசார் பணியாற்றும் அறையில் மதியம் வேளையில் ஒரு பெண் போலீஸ் மற்றும் பெண் துப்புரவு பணியாளர் பிரேமா (60) இருந்துள்ளனர். அப்போது திடீரென்று கட்டிடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதை பார்த்த பெண் போலீஸ் ஒருவர் அங்கிருந்து தலை தெறிக்க வெளியே ஓடி வந்தார். ஆனால் வெளியே வர முயன்ற பிரேமா மீது கட்டிடத்தின் இடிபாடு விழுந்தது. இதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

இதை பார்த்த, அருகில் இருந்த சட்டம் ஒழுங்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் அவரை காப்பாற்றி அம்பத்தூரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பிரேமாவுக்கு தலையில் ஆறு தையல்கள் போட்டுள்ளனர். மேலும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருந்த போலீசார் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும், இடிந்த மகளிர் காவல் நிலையத்தை சீரமைக்க தற்போது பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அம்பத்தூர் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambattur Police Station, Building Accident, Female Wound,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...