×

கடற்கரையில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரயில் நடுவழியில் பழுது

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில், நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால், 30 நிமிடம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு செல்ேவாரும், மேற்கண்ட காரணங்களுக்காக புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கும் செல்வோர் அதிகளவில் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், காலை, மாலை நேரங்களில் இந்த வழித்தட மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், நேற்று காலை 8.05 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தபோது திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த மின்சார ரயிலை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து ஊழியர்கள் விரைந்து வந்து மின்சார ரயிலில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறுகளை சரி செய்தனர். இதையடுத்து அந்த ரயில் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டது. காலை நேரத்தில் ரயில் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : beach , Eectric train running ,beach
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை