×

இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு!

கொழும்பு : இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், சொகுசு உணவகங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை சுமார் 359 பேர் உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் அங்கங்கே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. இலங்கை முழுவதும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளில் இருந்து வரக்கூடிய உளவுத்துறை தகவல்களை பெற்று வெடிகுண்டுகள் உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

உலகையே உலுக்கிய இக்கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அதிபர் சிறிசேனவின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஐக்கிய தேசிய கட்சி, விடுதலை முன்னனி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் மனோ கணேசன், ஹக்கீம் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

குண்டுவெடிப்பிற்கு அரசியர் ரீதியில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு சர்ம மதத்தை சேர்ந்த தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மதத்தினரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும், மதங்களுக்கிடையே பிரிவுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்துகள் பரவி வருவதால் இதுகுறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதனிடையே இன்று காலை கொழும்புவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய பூகொட என்ற இடத்தில் நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party meeting ,Sirisena ,Sri Lanka ,Ranil Wickramasinghe , Sri Lanka Blast, President Sirisena, All Party Meeting, Ranil Wickramasinghe
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்