செங்கோட்டை: சுட்டெரிக்கும் வெயிலால் நீர்வரத்தின்றி அடவிநயினார் அணை குட்டையாக மாறியுள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மேக்கரையில், அடவிநயினார் அணை அமைந்துள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் வடகரை, அச்சன்புதூர், வலசை, இலத்தூர், கரிசல், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, சுரண்டை, சீவநல்லூர் உள்ளிட்ட 8 கிராமங்களில் 7,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்தாண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையின்போது அடவிநயினார் அணை நிரம்பியது. அப்போது விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
நவ.2ம் தேதி வரை தினமும் 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு சாகுபடியும் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தாண்டு துவக்கம் முதலே மழையின்றி வெயில் சுட்டெரித்ததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 10 அடிக்கு சேறும், சகதியுமாக குட்டை போல் காட்சியளிக்கிறது. அணைக்கு தண்ணீர் வரும் காட்டுப்பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுள்ளது. வரும் மழைக்காலத்தில் தண்ணீர் முழுமையாக தேக்கி வைக்கும் வகையில், அணையில் தேங்கி கிடக்கும் சகதி மற்றும் மண் குவியலை தூர்வாரி அணையின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி