முர்ஷிதாபாத்: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதியும் 91 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 3ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத்தின் ராணிநகர் என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே அடையாளம் தெரியாத சிலர், வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். வாக்குச்சாவடி எண் 27 மற்றும் 28 அருகில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மோதிகஞ்ச் பகுதியில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சியின் முகாம் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி