பெர்த் : ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த 2 மாத கை குழந்தை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதியைச் சேர்ந்த அந்த குழந்தையின் பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக கோலாலம்பூர் நகரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில் பயணத்தின் போது, அந்த குழந்தைக்கு திடீரென சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. மூச்சு விட மிகவும் சிரமப்பட்டதை அடுத்து மருத்துவர்களின் உதவியுடன் குழந்தைக்கு நீண்ட நேரம் சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் அந்த சிகிச்சை பலன் அளிக்காததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து நேற்று காலை 5.30 மணி அளவில் பெர்த் நகரில் விமானம் தரையிறங்கியபோது காவல்துறை அதிகாரிகளுக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் பயணிகளின் பாதுகாப்புதான் மிக முக்கியம் என்றும் ஏர்ஏஷியா பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இதனிடையே கைக்குழந்தையின் மரணம் தொடர்பில் வேறு எந்தத் தகவலையும் அந்தப் பேச்சாளர் வெளியிடவில்லை. பெர்த் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு காலை 6.50 மணிக்குத் திரும்ப வேண்டிய அந்த விமானம் முற்பகல் வரை விமான நிலையத்தில்தான் இருந்தது. ஆஸ்திரேலியக் காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி