புதுடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் கூடுதலாக 3 மாதம் அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பதவியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த பதவிகளுக்காக கடந்த 2016 அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதையடுத்து பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.
இதையடுத்து மேற்கண்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வழங்க முடியாது என்றும், அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அடுத்த இரண்டு வாரத்தில் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மே மாதம் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது புதிய பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி இன்னும் முடிவடையாமல் உள்ளது.
அதனால் திட்டமிட்டபடி வரும் மே மாதம் உள்ளாட்சி தேர்தலை தமிழகத்தில் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் கூடுதலாக மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தற்போது நடக்காது என தெரியவந்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி