×

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவரச நிலை பிரகடனம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வருவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். மேலும் முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அதிபர் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இலங்கையில் கிறிஸ்தவர்கள் நேற்று பல்வேறு தேவாலயங்களில் திரண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 8.45 மணியளவில் கொழும்புவின் கோச்சிகடே பகுதியில் உள்ள செயின்ட் அந்தோணி புனித தேவாலயத்தில் முதல் குண்டு வெடித்துச் சிதறியது. அதே நேரம், புறநகரான நெகோம்போ பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பில் உள்ள ஜியான் தேவாலயங்களிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இதுதவிர கொழும்பில் உள்ள பிரபலமான மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.

இதில், தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை வெடிகுண்டு நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, நேற்று இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை இலங்கை அரசு வெளியிட்டது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படுவதாக இருந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்றும் முப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இந்த அவசர நிலை பிரகடனத்தை அடுத்து ஊடகங்கள், அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் விளக்கமளித்துள்ளார். மேலும் இலங்கையில் நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Announcement ,Maithripala Sirisena ,state of emergency ,Sri Lanka , Sri Lanka, Declaration of Emergency, President Maithripala Sirisena
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...