பல்லாவரம்: பல்லாவரம் அருகே இறைச்சி கடைக்காரர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரம் அடுத்த நாகல்கேணி ஆதம் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (48). அதேபகுதி திருநீர்மலை பிரதான சாலையில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தீனா (28) மற்றும் பார்த்தீபன் (32) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் சீனிவாசன், வீட்டிற்கு செல்வதற்கு தயாரானார். அப்போது அங்கு வந்த 8 பேர், சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட முயன்றனர்.
சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால், ஓட ஓட விரட்டி அவரை 8 பேர் கும்பல் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பியது.
தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த குரோம்பேட்டையை சேர்ந்த விஜய் (24), பார்த்திபன் (25), விஜய் (23), சூர்யா (24), ஆனந்த் (24), கண்ணன் (24), டில்லி பாபு (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி