குளத்தூர் : குளத்தூரிலிருந்து முள்ளூர் செல்லும் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி கிணறால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேற்கு பகுதி வழியாக முள்ளூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் வீரபாண்டியாபுரம், த.சுப்பையாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளுக்கு குளத்தூர் வழியாக வந்து செல்வர். குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அப்பகுதி கிராம மாணவர்கள் சைக்கிள் மூலமாக இந்த சாலை வழியாகத்தான் சிரமங்களுடன் செல்கின்றனர்.
இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் குளத்தூர் ஆரம்ப பகுதியில் சாலை ஓரம் அமைந்துள்ள இரண்டு திறந்தவெளி கிணறுகள் அப்பகுதி வழியாக வாகனத்தில் செல்வோரை அச்சுறுத்திய வண்ணம் உள்ளது.