×

நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது இளநிலை பெண் உதவியாளர் புகார் கூறியிருந்தார். பெண் உதவியாளர் புகாரை மறுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். தற்போது அந்த பெண் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக தலைமை நீதிபதி விளக்கம் கொடுத்து உண்மையா, இல்லையா என தெளிவுப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட விடுமுறை கால அவசர அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது விளக்கமளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தம் மீதான பாலியல் புகார் அடிப்பை ஆதாரமற்றது என்றும், 20 வருட சுயநலமற்ற சேவை செய்துள்ள நிலையில் புகார் தரப்பட்டுள்ளது வேதனை தருகிறது என கூறியிருந்தார்.

அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன், அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன் என்றும், எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், புகார் கூறிய பெண்ணை மிகப்பெரிய சக்தி இயக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் புகார் கூறும் பெண் ஒன்றரை மாதம் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியதாகவும், அப்போதே இந்த புகார் வந்தது, ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது அவசியமில்லை என கருதினேன் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். என் மீது பாலியல் புகார் கூறிய பெண் குற்ற வழக்குகளுக்காக 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார், அவர் மீது பல குற்ற பின்னணிகளும் இருந்துள்ளதால் போலீசார் அவரை இரு முறை எச்சரித்துள்ளார் என்றும், எனக்கு எதிரான பாலியல் புகார்களை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள், நான் விசாரிக்க மாட்டேன் என்றும் தகவல் அளித்துள்ளார்.

என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால், பெண் ஊழியர் இதுபோன்ற புகாரை அளித்துள்ளார் என்றும், சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அற்பத்தமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் அமர்வு, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை, இதனை வெளியிட தடையும் இல்லை என கூறியுள்ளனர். ஆனால் ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயல்படுங்கள் என வலியுறுத்தியுள்ளனர். அடுத்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு, மோடியின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம், தமிழக தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா ஆகிய முக்கிய வழக்குகளை விசாரிக்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judiciary ,Ranjan Kokai , Judicial,Sexual complaint, Chief Justice Ranjan Kokai
× RELATED உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர்...