அகமதாபாத்: ‘அகமதாபாத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் பழைய கரன்சி நோட்டுக்களை மாற்றும் தாடிக்கார ஆசாமி யார் என அடையாளம் கூறினால், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அறிவித்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கபில் சிபல் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தாடி வைத்த நபர் ஒருவர் ரூ.5 கோடி அளவுக்கு பழைய கரன்சிகளை கொடுத்து ரூ.3 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டுகளை பெறுகிறார். இந்த காட்சியை பத்திரிகையாளர்கள் பார்த்த பிறகு கபில் சிபல் அளித்த பேட்டி:இந்த சம்பவம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. வீடியோவில் உள்ள நபர் பா.ஜ.வுக்கு நெருக்கமானவராக இருப்பது போல் தெரிகிறது. அவர் பா.ஜ உறுப்பினராகவும் இருக்கலாம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின், அதாவது, கடந்த 2016 டிசம்பர் 31ம் தேதிக்குப்பின் இவர் மற்றவர்களுடன் சேர்ந்து பழைய நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்றுகிறார். அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், புரோக்கர்கள் இந்த பணமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதில், 40 சதவீதம் வரை கமிஷன் கிடைத்துள்ளது. வீடியோவில் பணம் மாற்றும் நபர் பற்றி யாராவது அடையாளம் கூறினால், அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்த பா.ஜ அரசு ஆர்வம் காட்டவில்லை. \இவ்வாறு அவர் கூறினார். இந்த வீடியோ, முதலில் கடந்த மாதம் 26ம் தேதி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, ‘காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னையை எழுப்ப எந்த விஷயமும் கிடைக்கவில்லை. அதனால், அது போலி விஷயங்களை சார்ந்துள்ளது. பொய்யான விஷயங்களை தொடர்ந்து கூறி வருகிறது’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி