×

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு: வாட்ஸ் அப் ஆடியோவால் கலவரம்

பொன்னமராவதி: ஒரு சமூகத்தினர் மற்றும் பெண்களை பற்றி வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர். இதில் 7 வாகனங்கள், 2 பஸ்கள் உடைக்கப்பட்டன. மேலும், 3 போலீஸ்காரர்கள், அந்த சமூகத்தை சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. இதனால், பொன்னமராவதியில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு ஒன்றுகூடி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அவதூறு பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீசார், புகார் மனு எழுதி கொடுங்கள் என்று கூறினர்.

இதற்கு அந்த சமூகத்தினர், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அவர்களில் சிலர், பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்கு சென்று பஸ்களை உள்ளே வராமலும், வெளியே செல்ல விடாமலும் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த கடைகளை அடைக்கும்படி கூறினர். இதனால் கடைகள் மூடப்பட்டது. தகவலறிந்த அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். நேற்று காலையும் பொன்னமராவதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. பொன்னமராவதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் அந்த சமூகத்தினர் கடைகளை அடைக்கும்படி கூறி போராட்டம் நடத்தினர். இதன்பின், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்ட பஸ்களை இயக்க விடாமல் மறித்து நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்றுவழியில் பஸ்களை திருப்பி விட போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான பெண்கள் துடைப்பத்துடனும், ஆண்கள் கம்புகள் எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக பொன்னமராவதி காவல் நிலையம் முன் வந்து அவதூறு பரப்பியவர்களை கைது செய்யவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தினர். இதனால் காவல்நிலையத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, மக்கள் காவல் நிலையம் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது சரமாரி கற்களை வீசினர். இதில் 3 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர். 7 வாகனங்கள், 2 பஸ்கள் சேதமடைந்தது. அப்போது கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் ஒரு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் அந்த சமூகத்தை சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர்.

இதனிடையே, 10 நிமிடம் கழித்து மீண்டும் அவர்கள் காவல் நிலையம் முன் திரண்டதால் பதற்றம் காணப்பட்டது. உடனே, மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, திருச்சி சரக டிஐஜி லலிதாலட்சுமி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், கலவரத்தில் ஈடுபட்டதாக 10 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போராட்டத்தை கைவிடுவதாக அந்த சமுதாயத்தினர்கூறினர். அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
144 தடை உத்தரவு: சம்பவம் தொடர்பாக, மாலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, திருச்சி சரக டிஐஜி லலிதாலட்சுமி ஆகியோருடன் காவல் நிலையத்தில் போராட்டக்காரர்களின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசினார்.

இதன்பின், செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறுகையில், ‘‘ஒரு சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட விஷமிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக, பொன்னமராவதி தாலுக்காவுக்குட்பட்ட 42 ஊராட்சிகளுக்கு  உட்பட்ட 50 கிராமங்களில் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை 3 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஒரு பஸ் மற்றும் வாகன போக்குவரத்து இருக்காது. 3 நாட்களுக்கு பின் சகஜ நிலை திரும்பிய பின் போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,Pudukkottai district , Pudukottai, police, shooting, 50 villages, 144 ban, riots
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...